ஐந்து பத்து
மாலைப் பொழுது
பசியின் மயக்கமும்
பரீட்சையின் களைப்பும்
சொக்கி இழுக்கினும்
ஐந்தொரு நிமிடமாவது
அரட்டையில் மூழ்கிபின்
வீட்டுக்குத் திரும்ப
கையில் காப்பியுடன்
பசிக்குப் புசிக்கப்
பண்டமும் வைத்துக்
காத்திருக்கும் அம்மா;
பசிதீர உண்டு
புத்தகத்தை நினைக்க
உண்ட மயக்கமும்
பயமும் கலந்து
கண்ணைச் சொருக
கட்டிலில் சாய
அனுபவித்த சொர்கமும்;
"சாப்பிட்டு படுடா"
அப்பாவும் அம்மாவும்
மாறி மாறி எழுப்ப,
எழுந்தும் எழாமல்
வம்பிழுக்கும் தம்பி;
வம்பின் எரிச்சலும்
தூங்கிய களைப்பும்
படிப்பின் ஞாபகம்
விழுங்கிய தோசையும்
தொண்டைக் குழியை அடைக்க
கண்ணில் வரும் நீரும்;
இரவின் குளிரும்
அந்தப் பால்கனியும்
அச்சுறுத்தும் பக்கங்களும்
வீணடித்த நிமிடங்களும்
அன்றெல்லாம் கனத்தாலும்
விடுதியின் நார்சுவருள்
இன்று எண்ண இனிக்கிறது..
No comments:
Post a Comment